Tuesday, September 13, 2016

ஒரே மேடையில் 425 தமிழ் நூல்கள் வெளியீடு - உலக சாதனை



செப்தெம்பர் 13, 2016ஆம் நாள் உலக வரலாற்றில் ஒரு சாதனை நாள். நம் தமிழ்மொழி உலக அளவில் மாபெரும் வரலாற்றை எழுதிய சிறப்புமிக்க ஒரு நாள்.

தமிழ்நாடு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல்கள் உள்பட 425 தமிழ் நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், டத்தோ டி. மோகன் மற்றும் மலாயா பல்கலைகழகத் தமிழ்த் துறை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்பட ஏராளமான மலேசியத் தமிழ் ஆர்வலர்கள் இந்த உலகச் சாதனை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். 


மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தனது 60 ஆண்டு (1956-2016) கல்விப் பணியினை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கம் திட்டத்தினைத் தொடங்கியது.

இத்திட்டத்தின்வழி கடந்தாண்டு 350 நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  ஒரே நேரத்தில் வெளியீடு செய்து சாதனை படைத்தது. அவற்றுள் 10 மலேசிய நூல்களும் அடங்கும். இவ்வாண்டு புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில், 425 நூல்கள் வெளியீடு கண்டன. இதில் 80 நூல்கள் மலேசியப் பெருந்தகையோர் பற்றிய ஆவண நூல்களாகும்.

இந்த நூல் வெளியீட்டினை ஒட்டி இன்று கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் குறித்த கட்டுரைகளும் படைக்கப் படுகின்றன.

தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழர் கலை, பண்பாடு, விளையாட்டு, தமிழர் இனமான உணர்வு, தமிழர் மேன்மை, சமூக பொருளாதார அரசியல் வழி தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்து மறைந்த தமிழ்ப் பெருந்தகையோரும், தமிழ்ச் சமுதாயம் உய்ய தொடர்ந்து பணியாற்றி வரும் பெருந்தையோரும் “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கத் திட்டத்தின் கீழ் அடங்குவர்.


மலேசிய மண்ணில் தமிழர்கள் மேன்மையுற உழைத்த, வழிகாட்டிய பெருந்தகையோரை அடையாளங் காணப்பட்டு ஆவணப்படுத்தப் படுத்துவதே நூல் எழுதும் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் இவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்; வாழ்வில் முன்மாதிரியாகவும் கொள்ளவேண்டும். இவர்கள் இல்லாவிடில் மலேசியாவில் தமிழும் தமிழர்களும் வெற்றி பெற்றிருக்க இயலாது என்பதை உலகத்தாருக்கு மலேசியத் தமிழர்களை அடையாளம் காட்டும் கடப்பாடாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது. 

மலேசியப் பெருந்தகையோர் பற்றி ஒரே நேரத்தில் 80 நூல்கள் உருவாக்குவது மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொருவரைப் பற்றியும் 100 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. எழுத்தப் படுவோர் குறித்த குறிப்புகளையும் படங்களையும் சேகரித்து சிறுசிறு தலைப்புகளிட்டு எழுதும் பணியில் 80 பேர் ஈடுபட்டனர். 

எழுதப் படுவோரின் பிறப்பு வளர்ப்பு, கல்வி, இலக்கியப் பணி, சமூகப் பணி, தமிழ் மற்றும் தமிழர் சிந்தனை, அவர்கள் முன்னெடுத்த திட்டங்கள், இன்னும் பிற அரிய பணிகளையும் தொகுத்து நூலாக எழுதினர். மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவேண்டிய மிகப்பெரிய பணியினை இவர்கள் செய்துமுடித்துள்ளனர்.

இத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க  சாதனைக்குப் பின்னணியில் நமது மலேசியாவைச் சேர்ந்த மலாயாப் பல்கலையின் முனைவர் சு.குமரன் அவர்கள் பெரும்பணி ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. மலேசியாவில் தமிழ்ச் சார்ந்த பணிகள் ஆற்றிய 80 பெருந்தகையோர் பற்றி ஆவணப்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியும் அதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தையும் போற்றுதலுக்கு உரியது. அவருடைய இப்பணி மலேசியத் தமிழ்ப் பெரியோர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது; மலேசியாவில் நடைபெற்றுள்ள அருந்தமிழ்ப் பணிகளை உலகத்திற்கு அறியச் செய்துள்ளது எனில் மிகையன்று. அந்தவகையில் காலத்தால் செய்யத்தக்க அரியதோர் பணியை முன்னின்று செய்திருக்கும் முனைவர் சு.குமரன் அவர்களுக்குத் திருத்தமிழ் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மலேசியாவைச் சேர்ந்த 80 நூலாசிரியர் பெருமக்களையும் மனாதாரப் பாராட்டுவதில் திருத்தமிழ் மகிழ்கிறது. 

மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல் வரிசையில் சில:-






நூல் வெளியீட்டு விழா காட்சிகள் சில:-




@சுப.நற்குணன்

No comments:

Blog Widget by LinkWithin