Sunday, September 25, 2016

#தமிழ்க்கல்வி200ஆண்டு:- தென்மண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம்


மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மலேசியாவில் 200ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டத்தை மலேசியக் கல்வி அமைச்சு முன்னின்று நடத்துகின்றது. இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குக் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ கமலநாதன் தலைமை ஏற்றுள்ளார்.

மலேசியாவில் 200ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் தொடர்பில் தென்மண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கு கடந்த 19.09.2016 தொடங்கி 22.09.2916 வரை சிறப்பாக நடைபெற்றது.

சொகூர் மாநிலம் சுகூடாயில் உள்ள கூட் ஓப் விடுதியில் நடந்த இந்தக் கருத்தரங்கில் 148 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பாலர் பள்ளி, தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த 4 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மலேசிய ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள் இந்தக் கருத்தரங்கில் கட்டுரைகள் படைத்தனர். கட்டுரைகள் மீதான விவாதங்களும் நடைபெற்றன. மேலும், தமிழ்க்கல்வி தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் கேள்வி பதில் அங்கமும் கருத்தாடல்களும் நடைபெற்றன.

மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு மலேசியத் தமிழ்க்கல்வி வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம், தமிழ் இலக்கியப் பாடம் ஆகிய இரண்டும் புதிய இலக்கை நோக்கிப் பயணம் செய்ய இதன்வழி மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.சு.பாஸ்கரன் அவர்கள் மலேசியாவில் 200 ஆண்டுகாலத் தமிழ்க்கல்வி வரலாற்றை விளக்கிப் பேசினார். மேலும் தமிழ்க்கல்வியின் வழியாக நாட்டில் நிகழ்ந்துள்ள வெற்றிகள், சாதனைகள் குறித்து பேசினார். தமிழ் ஆசிரியர்களின் பணிகள் பற்றி மிக விரிவாகப் பேசினார். மேலும் இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களின் அளப்பரிய சேவைகளைப் பாராட்டினார். தமிழ்க்கல்வியின் தேவையைப் பற்றி பேசுகையில் மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைபெற தமிழாசிரியர்கள் பெரும் பங்காற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது என வலியுறுத்தினார். இன்றைய காலத்தில் தமிழ்க்கல்வியை நாம் வளர்த்தால்தான் எதிர்காலத்தில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்மொழி தாய்மொழியாக நிலைக்கும். அதற்காக இன்றைய ஆசிரியர்கள் மொழி உணர்வையும் இன உணர்வையும் சமய உணர்வையும் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கருத்தரங்கில் கட்டுரைகள் படைத்த பேச்சாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் திரு.சு.பாஸ்கரன் நன்றியும் பாராட்டையும் தெரிவித்ததோடு நற்சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.

கருத்தரங்கின் காட்சிகள் சில:-











#தமிழ்க்கல்வி200ஆண்டு

@சுப.நற்குணன்

No comments:

Blog Widget by LinkWithin