Wednesday, July 14, 2010

செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள்

சூன் 23 – 27 கோவையில் பெருமாண்டமாக நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தமிழகப் பேராளர்களுக்கு அடுத்த நிலையில் மலேசியாவிலிருந்துதான் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழ்க் கல்வி அதிகாரிகள், தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழ் நெறிக் கழகம், அரசியல் தலைவர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் என 350க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் மலேசியத் தமிழர்களின் கட்டுரைகளும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து 23 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. உடன் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்க் கணினி, இணையம் தொடர்பில் 7 கட்டுரைகள் இடம்பெற்றன.

[மலேசியத் தமிழர்களின் மாநாட்டுப் படைப்புகள் நிகழ்ப்படங்களாக (video) திருத்தமிழ் வலைப்பதிவில் விரைவில் வெளியிடப்பெறும். தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற்ற என்னுடைய படைப்பை பதிவேற்றியுள்ளேன். காண்க.]

ஏற்கனவே, 1966இல் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி உலக அரங்கில் தமிழுக்கு மகுடம் சூட்டியவர்கள் மலேசியத் தமிழர்கள் என்பது வரலாறு. இப்போது புதிய நூற்றாண்டில் தமிழுக்குப் புத்தெழுச்சி ஊட்டியுள்ள செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பும் பெருமளவில் இருக்கிறது என்பது புதிய வரலாறு.

வரலாறு காணாத அளவில் வெகு சிறப்பாக நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டோம் என்ற பெருமையோடு நின்றுவிடாமல், மலேசியப் பேராளர்கள் அனைவரும் நாட்டில் தமிழ் உணர்வு பெருகவும் தமிழ் எழுச்சி பெறவும் தங்களால் ஆன சீரிய பணிகளை ஆங்காங்கே முன்னெடுக்க வேண்டும். இளையோரிடத்தில் தமிழ்ப் பற்றைச் செழிக்கச் செய்யும் செயற்பாடுகளை நிகழ்த்திட வேண்டும். புதிய சிந்தனையோடு தமிழின் வளர்ச்சிக்கு வித்திடும் வழிவகைகளைக் காண வேண்டும். இவ்வாறு செய்வது ஒன்றே தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டதற்கு பொருளுடையதாக அமையும்.

மாநாட்டில் கலந்துகொண்ட மலேசிய அன்பர்களின் படத்தொகுப்பை கீழே வழங்குகிறேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர்
பாப்பா பாவலர் ஐயா முரசு.நெடுமாறன், சுப.நற்குணன்
கணித்தமிழ் அறிஞர்களுடன் தமிழறிஞர் ஐயா.சீனி நைனா முகம்மது
தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் முரளியும் மன்ற மணிகளும்
மைக்ரோசாப்டு நிறுவன ஊழியர்கள் மைக்கேல், திங் சியு பே ஆகியோருடன் சுப..நற்குணன், விரிவுரைஞர் மன்னர் மன்னன், சி.ம.இளந்தமிழ்
மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் அருள்முனைவர், மாரியப்பனார்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை எனக் கருத்துரை வழங்கி பலத்த கைதட்டல் பெற்ற திருமதி நாகேசுவரி
எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், இளம் எழுத்தாளர்கள்

மாண்புமிகு கனிமொழி அவர்களுடன் கல்வி அதிகாரி புஷ்பராணி
சுப.நற்குணன், திருமதி.நாகேசுவரி, மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம், முகமை அமைப்பாளர் சு.பாஸ்கரன், ஆசிரியர் முத்தரசன், விரிவுரைஞர் அருட்செல்வன், கோவி.மதிவரன்

மலேசியக் கல்வி அதிகாரிகள்


No comments:

Blog Widget by LinkWithin