Sunday, April 18, 2010

பாடநூலில் பூச்சியமே போ! போ! சுழியமே வா! வா!


விரைவில் தமிழில் வெளிவரவுள்ள கணிதம், அறிவியல் பாடநூல்களில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதாக நமது நாளிகைகளில் செய்திகளும், கண்டனங்களும் கடந்த ஒரு வாரமாக அல்லோலக் கல்லோலப் படுகின்றன.

சுழியம் என்ற நல்லதமிழ் சொல் இருக்கும்போது ‘பூஜ்யம்’ என்னும் வடசொல்லை வலிந்து புகுத்துவதாக ஓர் அதிகாரி மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்ப்பள்ளியில் கணிதம், அறிவியல் பாடங்களைத் தமிழில் படிக்கும் மாணவர்களுக்குச் ‘சுழியம்’ என்று தமிழில் கற்பிப்பதை விடுத்து ‘பூஜ்யம்’ என்று அன்னியச் சொல்லை வலிந்து புகுத்துவானேன் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதேவேளையில், சுழியமும் பூஜ்யமும் ஒன்றுதான் என்று ஒருவர் அடிப்படையற்ற ஓர் அறிக்கை வெளியிட்டு(மக்கள் ஓசை 16.4.2010) இந்தக் சிக்கலில் எண்ணெயை ஊற்றி மேலும் சூடேற்றி விட்டார். சுழியமும் பூஜ்யமும் ஒரே பொருளுடைய சொல்லாக இருந்தாலும் மொழியால் வேறு வேறானவை. மலாய்மொழியில் கோசம் (Kosong) என்பதும் இதே பொருளுள்ள சொல்தான். அதற்காக சுழியமும் கோசமும் ஒன்றாகிவிடுமா? தமிழ்ப் பாடநூலில் கோசம் என்று எழுத முடியுமா என்று சரமாரியான கேள்விகள் வீசப்படுகின்றன.

சுழியம் – பூஜ்யம் சிக்கலில் ஒரு குறிப்பிட்ட அதிகாரி வசமாக மாட்டிக்கொண்டுவிட்டார். ஏற்கனவே, அவருடைய பழைய செயற்பாடுகள் சில தமிழுக்கு எதிரானதாக இருப்பதால்; இப்போது இந்தச் சிக்கலும் சேர்ந்துகொண்டதால் அவருடைய பெயர் நார் நாராகிக் கொண்டிருக்கிறது நாளேடுகளில்.

பாடநூலில் சுழியத்திற்குக் கதவடைப்புச் செய்துவிட்டு பூஜ்யத்திற்கு தீப தூபம் காட்டி ஆராதனை செய்யும் கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு, பாடநூல் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு எதிராக, நாளிதழ்களில் வெளிவந்த கண்ட அறிக்கைகளின் சாரம் கீழே தொகுத்து வழங்கப்படுகிறது.

1.இரெ.சு.முத்தையா (தேசியத் தலைவர் மலேசியத் திராவிடர் கழகம்):- இவருடைய கண்டனச் செய்தியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

2.சு.வை.லிங்கம் (தலைவர், தமிழ்க் காப்பகம்):-
மலாய் மொழியில் காலந்தோறும் புதுப்புதுச் சொற்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் நாங்கள் பழையச் சொல்லைத்தான் பயன்படுத்துவோம்; புதிய சொல்லைப் பலுக்கமாட்டோம் என்று சொல்வதில்லை. முன்பு பங்கோங் வாயாங் கம்பார் (Panggung Wayang Gambar) என்பர். இதை பவாகாம் (Pawagam) என ஆக்கிவிட்டனர். இப்படி மலாய்மொழி வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல் உலகில் உள்ள வலிமையான மொழிகளில் முதல் வரிசையில் இருக்கின்ற ஆங்கில மொழியும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகின் செம்மொழிகளில் ஒன்றான தமிழில் இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்துவதற்குக் கல்வித் துறையில் இருக்கும் தமிழ்ப் பிரிவில் அமர்ந்துகொண்டு “புதிய சொல்லைப் பயன்படுத்த முடியாது. பழையபடிதான் இருப்பேன்” என்று இறுமாப்பாகப் பேசும் அதிகாரி பதவியில் நீடிக்கலாமா? சமுதாயத்திற்குப் பதில் சொல்லத் தெரியாத அதிகாரியைக் கல்வி அமைச்சு உடனே மாற்ற வேண்டும். (மலேசிய நண்பன் 13.4.2010)

3.கவிஞர் காரைக்கிழார் (தலைவர், தமிழ்ச்சங்கம்):- அரசாங்க வானொலியான மின்னலில் தற்போது நல்லதமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தமிழில் அவ்வளவு அக்கறை காட்டாத தி.எச்.ஆர் இராகா வானொலியே சுழியத்தைப் பயன்படுத்துகின்ற அதிசயம் நிகழ்கின்றது. வானவில் தொலைக்காட்சியும் சுழியத்தைப் பயன்படுத்துகிறது.

தமிழ்மொழியில் கலந்துவிட்ட வேற்றுமொழிச் சொல் என்று தெரிந்த பின்னும் பூஜ்யத்தைப் பயன்படுத்துவேன் என்று சண்டித்தனம் செய்வது அரசு அதிகாரிக்கு அழகல்ல. இராமநாதன் தமிழ்மொழி கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவரா அல்லது சமஸ்கிருத மொழிக் கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவரா?

வளர்ச்சி என்பது அறிவியலுக்கும் நாகரிகத்திற்கும் மட்டுமல்ல; மொழிக்கும்தான். முன்பெல்லாம் ‘வந்தனம்’ என்று சொல்லிக்கொண்டிருந்த நாம் தற்பொழுது ‘வணக்கம்’ சொல்வதில்லையா? பூஜ்யத்திற்கு வந்தனம் தெரிவிக்கும் இவர் சுழியத்திற்கு வணக்கம் சொல்ல முன்வர வேண்டும். எனவே, இராமநாதன் கருத்தைக் கண்டிப்பதுடன் சுழியம் என்ற தமிழ்ச்சொல்லை பாடநூல்களில் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். (மலேசிய நண்பன் 13.4.2010)

4.இரா.திருமாவளவன் (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ்நெறிக் கழகம்):- இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரசு ஏற்படுத்தித் தந்த பதவியில் அமர்ந்துகொண்டு, தனது மேலதிகாரிகளின் அணுசரனை இருக்கிறது என்பதற்காக சுழியத்தைப் பயன்படுத்த முடியாது என்று இன்னமும் இறுமாப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரிகள், தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் தேர்வு வாரியம் வெளியிட்ட கலைச்சொல் அகரமுதலியில் சுழியமும் இருக்கின்றது; பூஜ்யமும் இருக்கின்றது என்பது உண்மைதான். வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் சுழியத்தைப் பயன்படுத்த வேண்டியதுதானே! அந்தக் காலக்கட்டத்தில் சுழியம் அவ்வளவு அறிமுகம் ஆகவில்லை. இப்பொழுது சுழியம் சமுதாயத்தில் நன்கு பயன்படுத்தப்படுகின்றது. உங்களுக்கு மட்டும் ஏன் தயக்கம்? காரணம் உங்கள் எண்ணமெல்லாம் சமஸ்கிருத வளர்ச்சியை மையமிட்டுள்ளது.

இதே கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பு வகித்த அந்நாளைய அதிகாரிகள், உபாத்தியாயர் என்பதை ஆசிரியர் என்று மாற்றினர். வித்யாசாலை என்பதை பாடசாலை என்றும், அப்பியாசம் என்பதை பயிற்சி என்றும், தேக அப்பியாசம் என்பது உடற்பயிற்சி எனவும், சம்சாரம் என்பது மனைவு என்றும் மாற்றப்படவில்லையா? நீங்கள் மட்டும் பூஜ்யத்தைப் பற்றி நிற்பதேன்?

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் துணை நல்குவதுதான் இராமநாதனின் பணியாக அமைய வேண்டுமே தவிர, காலமெல்லாம் தமிழுக்குச் சறுக்கலை ஏற்படுத்துவது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக அரசாங்க நிதியைக் கொண்டு தயாரித்த கையேட்டில் இருந்த தமிழரசன் என்ற பெயரை நிரோஷா என்று இரவோடு இரவாக ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் வேறுபாடு தெரியாமல் மாற்றியவர்களுக்கெல்லாம் துணை நின்ற இராமநாதன் இன்னமும் மாறவில்லை. (மலேசிய நண்பன் 18.4.2010)

5.மருத்துவர் ஜெயபாலன் (தலைவர், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்):- தமிழ்மொழியின் இயல்பான வளர்ச்சிக்குத் துணை புரியாத இராமநாதனை கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து வேறு பொறுப்பிற்கு மாற்ற வேண்டும்.

சுழியம் என்ற சொல்லுக்கு இவருக்குப் பொருள் தெரியவில்லை; அக்கறை இல்லை என்பதற்காக மற்றவர்களுக்கெல்லாம் தெரியாது என்பது பொருளல்ல. எனவே பழக்கத்தித்கு வந்துவிட்ட சுழியம் என்ற சொல்லை அறிவியல், கணிதப் பாடநூலில் சேர்ப்பதற்கு மற்ற பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முன் இராமநாதன் தன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அல்லது அவர்மேல் கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான தான் ‚ முகைதின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். (மலேசிய நண்பன் 15.4.2010)

6.செ.குணாளன் (செயலாளர், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்):- பூஜ்யம்தான் எல்லாருக்கும் புரியும். சுழியம் வேண்டும் என்றால் பொது மக்கள், பொது இயக்கங்கள் கருத்து சொல்லட்டும். எல்லாரும் ஏற்றுக்கொண்டால் நாம் அந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். சுழியம் வேண்டுமானால் இவர்கள் கல்வி அமைச்சுக்குக் கடிதம் எழுதட்டும் என்று எண்ணற்ற சாக்குப் போக்குகளைக் கூறி வருவதாகத் தெரியவந்துள்ளது.

தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை சுழியை அடிப்படையாகக் கொண்டவை. அதன் அடிப்படையில் தான் வட்ட வடிவிலான இந்த எண்ணுக்குச் சுழி என்பதுடன் ‘அம்’ என்ற ஒற்றை இணைந்து சுழியம் என்ற சொல்லைப் புனைந்திருக்கிறார்கள். இன்றைய தமிழறிஞர்கள் அதனை எடுத்தாண்டுள்ளனர். இது எந்த வகையில் தவறாகும். ஏன் இந்த அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கின்றனர். இவர்கள் தமிழ்த்துறை அதிகாரிகளா அல்லது தமிழின் பெயரில் பிறமொழிச் சொற்களின் முகவர்களா? (மக்கள் ஓசை 15.4.2010)

இப்படி பலருடைய கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்தச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு பிறக்கப் போகிறது என்பதை எல்லாரும் கவனத்தோடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும், சுழியத்தைப் புறக்கணிப்பதற்கு எந்தவொரு வலுவான சான்றோ அல்லது அடிப்படையோ இருப்பதாகத் தெரியவில்லை..; சில அதிகரிகாரிகளின் சமற்கிருத / கிரந்த தீவிரவாதப் போக்கைத் தவிர..!!

தொடர்பான செய்தி:

1."0" இது சுழியமா? பூச்சியமா?

2.சுன்னம் - சுழியம்


No comments:

Blog Widget by LinkWithin