Sunday, March 14, 2010

திருந்தாப் பிறவியா தி.எச்.ஆர் ராகா?



மலேசியத் தனியார் தமிழ் வானொலி தி.எச்.ஆர் ராகா அண்மையில் அதன் அடையாள இசையையும் அடைமொழியையும் ‘செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு’ (Semma Hottu Semma Hittu) என்று மாற்றிவிட்டது. இதனால், அவ்வானொலி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் குறிப்பாகத் தமிழ்ப் பற்றாளர்களின் வன்மையான கண்டனத்திற்கு உள்ளானது.

பினாங்குப் பயனீட்டாளர் சங்கம், பொது இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், இளைஞர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த வேளையில் காவல்துறையில் புகாரும் செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில், ஆகக் கடைசியாக கடந்த 12-3-2010இல் கோலாலம்பூரில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் பல இயக்கங்கள் ஒன்றுகூடி அந்தத் தனியார் வானொலியின் தமிழ் சீரழிப்பு வேலையைக் கண்டிக்கும் வகையில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் தலைமையேற்று ராகா வானொலி தமிழ்மொழியைச் சிதைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளான சில விடயங்கள்:-

1)அறிவிப்பாளர்கள் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

2)நேயர்களிடம் இரட்டை பொருள்தரும் வகையில் பேசக்கூடாது.

3)செம்ம ஓட்டு செம்ம ஈட்டு என்ற அடைமொழியை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

4)தமிழைச் சிதைத்தும் சின்னபின்னப்படுத்தியும் வேடிக்கை காட்டும் வேலையைக் கைவிட வேண்டும்.

5)மலேசியத் தமிழர்கள் நல்ல தமிழில் பேசுபவர்கள்; பண்பாக நடப்பவர்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. ராகா வானொலி இந்த மரபைக் கெடுக்கக் கூடாது.

6)ஆயிரக் கணக்கான நேயர்கள் செவிமடுக்கும் வானொலியில் கொச்சை மொழியில் பேசுவதும் நிகழ்ச்சியை வழிநடத்துவதும் ஏற்புடையதல்ல.

7)பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பேசுவதும், இது எப்படி இருக்கு என்ற நிகழ்ச்சி வழி மனங்களைப் புண்படுத்துவதும் கூடாது.

8)”ரிங் அடிச்சா ரிங்கிட்” என்பது போல கலப்பு மொழியில் நிகழ்ச்சி தலைப்புகள் வைக்கப்படுவது மொழியை அழிக்கும் வேலையாகும்.


9)பொழுது போக்குதான் வாழ்க்கை என்பது போலவும், ‘எஞ்சோய்லா’ (Enjoy-lah) என்று கூறி சினிமாதான் இளையோர்களின் வாழ்க்கைமுறை என்பது போலவும் தோற்றத்தை ஏற்படுத்தி மாணவர்களையும் இளையோர்களையும் கெடுக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

10)வானொலி நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக, புதுமையாக, சமூக வளர்ச்சிக்கு நல்லதாக இருக்க வேண்டுமே தவிர மொழியை அழிப்பதாக இருக்கக் கூடாது.

எவ்வளவுதான் தனிமனித உரிமைக்கு நாம் இடம் கொடுத்தாலும், சமுதாயத்திற்கு என்று உரிமை இல்லையா. அதனைத்தான் நாம் பொது ஒழுக்கம் என்கிறோம். ஆயிரக்கணக்கான நேயர்களிடம் பேசும் பொழுது அவர்களை மதிக்கும் வண்ணம் பேசுவது இயல்பு அதனைவிட்டு மது பான விடுதியில் (Pub culture) பேசுவது போல் நிகழ்ச்சியை நடத்துவது எவ்வகையில் சரியாகும். இதனைதான் சமூகம் விரும்புகிறது என்றால், அவ்வளவு மோசமான சமூகமா நமது சமூகம்? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், கூட்டத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


எத்தனை இயக்கங்கள் கண்டன குரல்களை எழுப்பியும், இவர்கள் கண்டுகொள்வதில்லை. தமிழால் உயர்ந்து தமிழை இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது, அதுமட்டுமன்றி மறுப்பு அறிக்கை வேறு. ஆங்கிலம் பேசுகின்ற நேயர்களை இழுக்கின்றார்களாம்! என்னையா வேடிக்கை இது ? ஆங்கிலம் பேசுகின்ற நேயர்களுக்காக தமிழை கொலை பண்ணலாமா ? ஆங்கில நேயர்களை இழுக்க வேண்டுமானால் ஆங்கிலத்தில் வானொலி நடத்திவிட்டுச் செல்லலாமே! ஏன் தமிழ்மொழியச் சிதைக்க வேண்டும்? எந்த மொழியாக இருந்தாலும் தூய்மையாகப் பேசுவதுதானே முறை!

அறிவுமயமான இந்திய சமூகத்தை உணர்ச்சிமயமான சிந்தனைகளில் மூழ்கடித்து, பொழுது போக்கு என்ற பெயரில் சமூகத்தை சீரழிப்பதை எந்த ஒரு மானமுள்ள மலேசியத் தமிழன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.

இவ்வளவு பெருமை வாய்ந்த நம் மொழியை அறிந்தும் அறியாதது போல் மொழியை சிதைத்து, பண்பாட்டை கெடுத்து இளைய தலைமுறையினருக்கு தவறுதலாக வழகாட்டும் இவர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது.

“மொழி என்பது நமது மான ஆடை, அதில் ஓட்டை விழுந்தால் நமக்குதான் அவமானம்.”

இவ்வளவும் நடந்த பிறகு, சமுதாயப் பொறுப்பையும் தமிழ்மொழி நலனையும் கருதிற்கொண்டு தி.எச்.ஆர் ராகா வானொலி என்ன செய்திருக்க வேண்டும்?

தான் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட அத்துணை தவறுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிப்பதோடு எல்லாத் தவறுகளையும் படிப்படியாகத் திருத்திக்கொள்வதாகக் கூறியிருக்க வேண்டும்; திருந்தியிருக்க வேண்டும்!

ஆனால் நடந்தது என்ன? செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு என்ற அடைமொழிக்குத் தற்காலிகமான நிறுத்தம் மட்டும்தான். இதனை அந்த வானொலியின் தலைமை நிருவாக அதிகாரி இரமேசு கூறியுள்ளார்.



திருந்தாப் பிறவியா இந்தத் தி.எச்.ஆர்.ராகா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இது பற்றி அவர்கள் கருத்து கணிப்பு செய்கிறார்களாம்! அதன் முடிவுபடிதான் அடுத்த நடவடிக்கை எடுப்பார்களாம்!

இவர்கள் நடத்தவிருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையாக இருக்குமா? எங்கே? எப்போது? யாரிடம்? இவர்கள் கருத்து கேட்கப் போகிறார்கள்? அவர்களுடைய கருத்துக் கணிப்பு வெளிப்படையானதாக இருக்குமா?

சமுதாய நலனைவிட; தமிழ்மொழி நலனைவிட; இளையோர் நலனைவிட; மாணவர்கள் நலனைவிட இவர்களுக்கு வர்த்தக வளர்ச்சிதான் முக்கியம்! வணிக நலன்தான் முக்கியம்! பணம்தான் முக்கியம்! காசுதான் முக்கியம்! என்றால்...

உண்மையிலேயே.. திருந்தாப் பிறவிதான் தி.எச்.ஆர்.ராகா!!! என்ற முடிவை நாம் கட்டாயம் எடுக்கவேண்டும்: கூடவே அந்த வானொலியை முடக்கிப்போட வேண்டும்.


பி.கு:- ஒரு குறிப்பிட்ட நாளிதழ் தி.எச்.ஆர் ராகாவுக்கு ஊதுகுழலாகச் செயல்படுவதுபோல தெரிகிறது. இதனைப் பற்றி நன்கு ஆராய்ந்த பிறகு அந்த நாளிதழுக்கு ஆப்பு அடிப்பதைப் பற்றி சிந்திப்போம்.

தொடர்பான செய்திகள்:-

1. செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு! தமிழுக்கு வேட்டு!!

2.செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!

4 comments:

தமிழ் said...

இந்த மலேசிய தமிழ் அமைப்புப்போல தமிழகத்தில் ஒரு தமிழ் அமைப்பு இல்லையே, யாரையும் , எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் கண்டிக்கவில்லையே என்ற வருத்தம் வருகிறது. தமிழ் மக்கள் இப்பொழுது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மானாட, மயிலாட, டீலா, நோ டீலா பார்த்தும் விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் தொலைக்காட்சிப்பெட்டிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதையே முக்கியமான ஒரு நிகழ்வாக கொண்டுள்ளனர். எங்கே தமிழன் போகிறான்?

subra said...

அந்த செம வானொலிக்கு ஆதரவு கொடுக்கும் நிறுவனங்களை
பட்டியல் லிட்டு அவர்களுக்கு முறையாக தெரிவிப்போம் ,சரிப்படவில்லை
என்றால் அதே பட்டியலை நமது எல்லா தமிழ் இயக்கங்களுக்கு
தெரிவித்து ,அந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்க வேண்டாம்
என்று பிரச்சாரம் செய்யலாம் ,அப்புறம் எப்படி அவர்கள் enjoy பண்ணுகிறார்கள்
என்று பார்போம் ,சம்பந்த பட்ட நாளிதழுக்கு உடனே வைப்போம் ஆப்பு
அறிவிப்பு வரும்வரைக்கும் தற்காலிகமாக எந்த நாளிதல்களியும் வாங்க
மாட்டேன் .

Unknown said...

மின்னலை மாலை 5 முதல் 8 வரை கேளுங்கள். சிறந்த பாடல்கள்.

Thiruu00 said...

நாம என்ன சொல்லி இவங்க கேட்டுட போறாங்க? புறக்கணிப்போம்....

Blog Widget by LinkWithin