Friday, January 01, 2010

2010இல் தமிழ் எழுத்தைச் சீரழிக்க முயற்சியா?


தலைப்பைப் பார்த்ததும் பலருக்கும் பகீரென்று ஆகியிருக்கும். இப்படி ஒரு செய்தியை மின்னஞ்சல் வழியாக அறிய நேர்ந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு குறித்து உலகத் தமிழ் அறிஞர்களிடையே பலவகைப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. அதன் பின்னணியில் நிழலாடுகின்ற அரசியலைப் பற்றியெல்லாம் இங்கு நான் எழுத வரவில்லை.

ஆனால், இந்த மாநாட்டில் அறிஞர் பெருமக்களைக் கூட்டி, தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த மின்மடல்கள் தற்போது உலா வந்துகொண்டிருக்கின்றன. அப்படியான மின்மடல்கள் சில எனக்கும் வந்திருந்தன.



தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி அதிகாரப்படியான அறிவிப்பு செய்யவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெறுவதாக அந்த மின்மடல்கள் தெரிவிக்கின்றன.

தமிழுக்கு நல்லது செய்வது போல நயவஞ்சகமாகத் தமிழ்மொழியின் எழுத்துகளில் சீரமைப்பு செய்து தமிழை மெல்ல சீரழிப்பதற்குச் சிலர் தீவிரமாக செயல்படுவதாக எனக்கு வந்த மின்மடல்கள் எச்சரிக்கை செய்கின்றன.

தமிழுக்கு எதிராக முளைக்கின்ற எந்தவொரு கீழறுப்புச் செயலையும் முறித்துப்போட்டுத் தமிழைத் தமிழாக வாழவைக்கும் பொறுப்பும் கடப்பட்டும் தமிழக அறிஞர்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத கடமையுணர்வும் காப்புணர்வும் உலகத் தமிழர்களுக்கும் இருக்கிறது.

எனவே, தமிழைத் தற்காக்கவும் மீட்டெடுக்கவும் உலகமெங்குமுள்ள தமிழ் அறிஞர்களும் பற்றாளர்களும் உணர்வாளர்களும் ஏன் ஓட்டுமொத்தத் தமிழர்களுமே அணிதிரண்டு குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த உணர்வின் உந்துதலினால், எனக்கு வந்த ஒரு மின்மடலை இங்கே எல்லாருடைய பார்வைக்காகவும் சிந்தனைக்காகவும் வெளியிடுகின்றேன்.

"நெருப்பில்லாமல் புகையாது" என்பதால் இந்த விடயம் குறித்து பதிவிட துணிந்தேன். இதன் தொடர்பிலான செய்தி அறிந்தவர்கள் மேலதிக தகவல்களை வழங்குமாறு வேண்டுகிறேன்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படவுள்ள சீர்த்திருத்தங்கள் பற்றிய விவரங்கள் கிழே இணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைதியாகப் படித்துப் பார்த்து உடனே செயல்படுமாறு தமிழுறவு தந்த உரிமையில் கேட்டுக்கொள்கிறேன். -(சுப.ந)

**************************
அன்புடையீர்,வணக்கம்.

இது ஒரு அவசர மடல்.

தமிழ் அறிஞர்களாக நம்பப்படும் சிலர், தமிழ் எழுத்துக்களில் இகர-ஈகார-உகர-ஊகார உயிர்மெய் வரிசைகளில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் சீர்திருத்தம் என்ற பெயரில் படுகொலை செய்ய பலகாலமும் முயன்று வந்திருக்கின்றனர்.

நானும் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு மடற்குழுக்களில் வாளாவிருந்து விட்டேன்.

அவர்கள் கருணாநிதியின் ஆட்சி காலத்திற்குள் அவரை வசப்படுத்தி எப்படியும் செய்து விட முனைந்து வருகிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பன்னாட்டு அறிஞர்களின் ஆதரவையும் நரித்தனமாகப் பெற்று வருகிறார்கள்.

சிங்கப்பூர் அறிஞர்கள் ஆதரவு நல்கி விட்டார்கள். தமிழக அறிஞர்களுக்கு முதுகில் இருப்பது எலும்பல்ல - நீளமான புல்; ஆதாலால் செந்நாப்புலவன் எல்லாரும் வாயைத் திறந்து அவர்களின் நலனைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஆகவே, பன்னாடு தழுவிய எதிர்ப்புக் குரல் இதற்கு எழுப்பப் பட வேண்டும். தற்போது செம்மொழி நடத்த இருக்கும் செம்மொழி மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு திரட்டி தீர்மானம் போட முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

இதற்கு, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து பலர் மறுப்புக் கட்டுரைகள் படைக்கிறார்கள். இந்தப் புதிய எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் தனி அடையாளத்தை அழித்துவிடும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது.

எனவே, தாங்களும் தங்கள் நாடு, மாநிலம் சார்பில் ஒரு எதிர்ப்புக் கட்டுரையைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி தனக்காக நடத்தும் செம்மொழி மாநாட்டில் எப்படி கலந்து கொள்வது என்று யானறிந்த பல தமிழாளர்கள் கருத்து கொண்டு பங்கு பற்றத் தயங்குகிறார்கள். எனக்கும் அவ்வச்சம் நீங்க நாள்களாயின.

ஆதலின், இவ்வளவு காலத்தாழ்வான அஞ்சல். நடப்பது ஒரு தமிழ் மாநாடு. அது எனது பணத்தில் 6 கோடி தமிழ் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. என் வரிப்பணத்திலேயே என் இனத்தைப் படுகொலை செய்ய எல்லா உதவியையும் அரசாங்கங்கள் செய்தது போல, என் வரிப்பணத்திலேயே என் மொழியையும் படுகொலை செய்ய வலிமையான முயற்சிகள் நடக்கின்றன.

யார் நடத்துகிறார்கள் என்பதனைப் பார்க்க இதுவல்ல நேரம். களத்தில் இறங்கி கருத்துக்களோடு மோதி அவர்களின் எண்ணங்களை முறித்துப் போடவேண்டும்.

நண்பர்களே, http://www.ulakathamizhchemmozhi.org/ என்ற இந்தத் தளத்தில் கட்டுரையாளராக, எழுத்துச் சீர்திருத்த மறுப்புக் கட்டுரையாளராக ஒரு பதிவினை இட்டு வையுங்கள்.

தற்போதைக்குச் செய்ய வேண்டியது இதுதான். 31-சனவரிக்குள் தங்கள் கருத்துக்களைக் கூட்டி சுருக்கம் அனுப்புங்கள். 31-மார்ச்சு வரை இறுதிக் கட்டுரையை அனுப்ப காலம் இருக்கிறது.

கீழே கொடுத்துள்ள சுட்டிகளில் மொழிப்படுகொலைக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை ஓர்ந்து பார்த்து தாங்களோ, தங்களின் சங்கத்தைச் சார்ந்தவர்களோ, அல்லது தாங்கள் அறிந்த சிந்தனையாளர் அல்லது அறிஞருக்கு இதனைச் சொல்லி கட்டுரை படைக்கச் சொல்லி அவர்களை மாநாட்டில் பங்கு பற்ற வையுங்கள்.

(தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மாபெரும் சீரழிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி முழு விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணைப்புகளைச் சொடுக்கவும்.)

(சீர்த்திருத்தம் செய்யப்பட்ட புதிய தமிழ் எழுத்துகளின் மாதிரி)

1)தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)


2)தமிழ் எழுத்துச் சீரமைப்பு --- http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)

3)தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)


***************************
தமிழா ஒன்றுபடு - தமிழால் ஒன்றுபடு - தமிழுக்காக ஒன்றுபடு

4 comments:

nayanan said...

செய்திக்கு மிக்க நன்றி.

http://www.tamilvu.org/

சீர்திருத்தம் என்ற பெயரில் எழுத்துச் சீரழிவு செய்ய முனையும் வா.செ.கு
தனது கருத்துக்களை தேனொழுகும்
சொற்களால் கண்கவரும் காணொளியுடன் மேற்கண்ட தளத்தில்
போட்டிருப்பதைக் காண்க.

http://www.ulakathamizhchemmozhi.org/http://www.ulakathamizhchemmozhi.org/content/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

வா.செ.கு செம்மொழி மாநாட்டின்
துணைத்தலைவர் என்பதனையும்
மேற்கண்ட சுட்டியில் காண்க.


அன்புடன்
நாக.இளங்கோவன்

அ. நம்பி said...

//...இந்த மாநாட்டில் அறிஞர் பெருமக்களைக் கூட்டி, தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன.//

//தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி அதிகாரப்படியான அறிவிப்பு செய்யவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெறுவதாக...//

//தமிழுக்கு நல்லது செய்வது போல நயவஞ்சகமாகத் தமிழ்மொழியின் எழுத்துகளில் சீரமைப்பு செய்து தமிழை மெல்ல சீரழிப்பதற்குச் சிலர் தீவிரமாக செயல்படுவதாக...//

இவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது; எழுத்துகளைச் `சீரமைத்தல்' வேண்டும் எனப் பரிந்துரை செய்பவர்தாம் மாநாட்டுத் தலைமைக்குழுவின் துணைத்தலைவராக உள்ளார். எனவே ஏதும் நடக்கலாம்; வியப்பதற்கு ஒன்றுமில்லை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் நாக.இளங்கோவன் ஐயா,

தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நனிநன்றி.

தாங்கள் வழங்கியுள்ள மேலதிக தகவல் 'தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த (சீரழிப்பு)முயற்சி' பற்றி மேலும் உறுதிபடுத்துவதாக உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேல் விவரங்கள் இருப்பின் வழங்கி உதவவும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் ஐயா.ஆ.நம்பி,

//இவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது; எழுத்துகளைச் `சீரமைத்தல்' வேண்டும் எனப் பரிந்துரை செய்பவர்தாம் மாநாட்டுத் தலைமைக்குழுவின் துணைத்தலைவராக உள்ளார்.//

ஏற்கனவே 13 எழுத்துகளை சீர்த்திருத்தம் செய்திருக்கிறார்கள். தமிழின் மூல வடிவத்தை இந்தச் சீர்திருத்தம் சிதைத்திருந்தாலும், தமிழ் எழுத்துகளில் மிகப்பெரிய தோற்ற மாற்றத்தை ஏற்படுத்தவிலை.

ஆனால், இப்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சீர்திருத்தம் அப்படியானது அல்ல என்று தோன்றுகிறது.

துணைத்தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விருப்பங்களை முன்படுத்தி தமிழ் எழுத்துகளில் மாற்றங்களைச் செய்து, தமிழின் தனி அடையாளத்தைச் சிதைப்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

அந்த எழுத்து சீரமைப்பினால் தமிழுக்குப் பெரிய ஆக்கம் எதுவும் ஏற்படப் போவதாகத் தெரியவில்லை.

Blog Widget by LinkWithin