Wednesday, January 27, 2010

எசுபிஎம்மில் 12 பாடங்கள்: கல்வி அமைச்சு சுற்றறிக்கை



மலேசியக் கல்விச் சான்றிதல் (எசுபிஎம்) தேர்வு தொடர்பான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடாகத் தெரியவில்லை. கடந்த ஆறு மாதங்களாக இந்தச் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

சரியான வழிகாட்டுதலும் விளக்கமும் கிடைக்காத நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் ஏன் ஆசிரியர்களும் கூட இவ்வாறு குழப்பத்திற்கு ஆட்பட்டுப் போவது இயல்பானதுதான்.

எசுபிஎம் தேர்வில் 10 பாடம்தான் எடுக்க வேண்டுமா? அல்லது தமிழையும் இலக்கியத்தையும் சேர்த்து 12 பாடம் எடுக்கலாமா? முடியுமா? என்ற குழப்பம் இனி தேவையில்லை.


மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களை எடுக்கலாம் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை வழி தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கை 13-1-2010இல் வெளியிடப்பட்டதாகும்,

சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் (சொடுக்கி) இந்தச் சுற்றறிக்கையைக் காண்க:

1. http://www.moe.gov.my/index.php?id=13&aid=541

2.http://apps2.moe.gov.my/lpm/images/pekeliling/Pekeliling%20Iktisas%20Bil%201_2010.pdf

இந்தச் சுற்றறிக்கையின்படி, மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பதற்கு இசைவு வழங்கப்பட்டுள்ளது.

*ஏற்கனவே, 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது கூடுதலாக 2 பாடங்களை எடுப்பதற்கு இசைவு வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**மேலும், மாணவர்கள் மொத்தமாகப் 12 பாடங்களை எடுக்க முடியும் எனவும் அதில் (தடித்த எழுத்துகளில்) குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.

***அதோடு, கூடுதலான 2 பாடங்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பாடங்களின் தேர்ச்சி அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நமது மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவித குழப்பமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை. மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களைத் தேர்வுக்கு எடுக்கலாம் – எடுக்க வேண்டும்.

எசுபிஎம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்களை எடுக்கலாம் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு எல்லாப் பள்ளிகளும் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்.

ஆகவே, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்பதற்கு இசைவு(அனுமதி) அளிக்காத பள்ளிகள் பற்றியும் அல்லது மாணவர்களைத் தடுக்கும் பள்ளிகள் பற்றியும் அல்லது மாணவர்களுக்குத் தடை விதிக்கும் பள்ளிகள் பற்றியும் கல்வி அமைச்சுக்குத் தெரியபடுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் கெடுபிடிகள் பண்ணும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது உடனடியாகப் புகார் செய்யவேண்டும்.

3 comments:

Tamilvanan said...

//12 பாடங்களை எடுக்க முடியும்,12 பாடங்களின் தேர்ச்சி அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும்.//

உண்மை.

//எனவே, நமது மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவித குழப்பமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை. மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களைத் தேர்வுக்கு எடுக்கலாம் – எடுக்க வேண்டும்.//

நிச்ச‌ய‌மாக‌

கேள்வி.

முழுமையாக‌ அங்கீக‌ரிக்க‌ப் ப‌ட்ட‌தா? ஏனெனில் க‌ல்வி அமைச்சின் துணை அமைச்ச‌ர் ம‌ற்றும் க‌ல்வி அமைச்சின் த‌லைமை இய‌க்குன‌ர்(Ketua Pengarah Pendidikan) ச‌ந்திப்பில் கூற‌ப்ப‌ட்ட‌ விள‌க்க‌ம் 10க்கு மேற்ப‌ட்டு எடுக்க‌ப்ப‌டும் 2 மொழிப் பாட‌ங்க‌ள்; மொழி சார்ந்த‌ தொழியிய‌ல‌க்கும் ,ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் மொழியிய‌ல் துறை விண்ண‌ப்ப‌த்திற்கு ம‌ட்டுமே ப‌ய‌ன் ப‌டுத்த‌ அங்கீகார‌ம் உள்ள‌து.

1) உதார‌ண‌த்திற்கு 12 பாட‌ங்க‌ள் எடுக்கின்ற‌ ஒரு த‌மிழ் மாண‌வ‌ன் முக்கிய‌ 10 பாட‌ங்க‌ளில்( 10 core subjects) 8 பாட‌ங்க‌ளில் A வும் 2 பாட‌ங்க‌ளில் B அல்ல‌து C பெற்று, த‌மிழ் மற்றும் த‌மிழ் இல‌க்கிய‌த்தில் A எடுக்கிறான். குறிப்பிட்ட‌ அந்த‌ மாண‌வ‌னுக்கு க‌ல்வி க‌ட‌னுத‌வி த‌குதிக்கு 10 A க்கள் என்று ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டாது.

2) உதார‌ண‌த்திற்கு 12 பாட‌ங்க‌ள் எடுக்கின்ற‌ ஒரு த‌மிழ் மாண‌வ‌ன் முக்கிய‌ 10 பாட‌ங்க‌ளில் 4 பாட‌ங்க‌ளில் A வும் 4 பாட‌ங்க‌ளில் B வும் 2 பாட‌ங்க‌ளில் C வும் பெற்று, த‌மிழ் மற்றும் த‌மிழ் இல‌க்கிய‌த்தில் A எடுக்கிறான். குறிப்பிட்ட‌ அந்த‌ மாண‌வ‌னின் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ விண்ண‌ப்ப‌த்திற்கு 6 பாட‌ங்க‌ளில் A க்கள் என்று ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டாது.( மொழியிய‌ல் துறைக்கு விண்ண‌ப்ப‌ம் செய்ந்திருந்தால் தவிர )

மேலும் ப‌ல‌ உதார‌ண‌ங்க‌ளை காட்ட‌லாம்.

ந‌ம்முடைய‌ கோரிக்கை இத‌ற்கு முன்பு த‌மிழ் ம‌ற்றும் த‌மிழ் இல‌க்கிய‌ பாட‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ அங்கிகார‌ம் நிலை நிறுத்த‌ப் ப‌ட‌ வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//ந‌ம்முடைய‌ கோரிக்கை இத‌ற்கு முன்பு த‌மிழ் ம‌ற்றும் த‌மிழ் இல‌க்கிய‌ பாட‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ அங்கிகார‌ம் நிலை நிறுத்த‌ப் ப‌ட‌ வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.//

கண்டிப்பாகப் போராட்டத்தைத் தொடர வேண்டும் - தொடர்வோம்.

இப்போதைக்கு 12 பாடங்கள் எடுக்க முடியும் என்ற அதிகாரப்படியான அறிவிப்பைப் பயன்படுத்திக்கொண்டு நமது மாணவர்களைத் தமிழ், இலக்கியம் ஆகிய இரு தேர்வுகளை எழுத ஊக்கப்படுத்துவோம்.

எந்த காரணத்திற்காகவும் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் கைவிட்டுவிடக் கூடாது.

தமிழையும் இலக்கியத்தையும் எழுதும் மாணவர்களுக்கும் சரி.. நமது மொழிக்கும் சரி.. உரிய உரிமையையும் உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொடுக்கும் போராட்டம் தொடர வேண்டும் - தொடர்வோம்.

இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பையும் நன்கு அறிந்துள்ளேன். உங்களுக்குத் தோளுரம் சேர்க்க நானும் அணியமாக இருக்கிறேன்.

மொழிக்காகப் போராடும் உங்கள் போர்க்குணம் வாழ்க நண்பரே!!

ராஜேஷ் said...

தமிழின் மீது நீர் கொண்ட பற்று எம்மை வெகுவாக கவர்ந்தது நண்பரே
இது எமது மின்னஞ்சல் rajesh_2225@yahoo.co.in
நன்றிகள் பல...

Blog Widget by LinkWithin