Friday, May 22, 2009

தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்: புலிகள் தலைவர் அறிவிப்பு

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.



சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் இராணுவத்தினாலும் உருவாக்கப்பட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் உலகத் தமிழ்ச் சமூகத்தைக் அறிவழகன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ்ச் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.

சிறிலங்காவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அறிவழகன், பாதுகாப்புக் காரணங்களுக்கான தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் 'தமிழ்நெட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆதாரம்: புதினம் செய்தி

No comments:

Blog Widget by LinkWithin